மன்னார் நகரப்பகுதில் 2015 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் நோய், தொற்றுகிருமிகள் காணப்படுவதன் காரணமாக நெருப்புக்காச்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வு அறிக்கைகளின் படி தெரிய வந்துள்ளதாக தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மன்னார் மீன்பிடித்திணைக்கள கேட்போர் கூடத்தில் தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனத்தினால் இன்று சனிக்கிழமை மதியம் இடம் பெற்ற விழிப்புணர்வு செயலமர்வின் போது குறித்த பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த செயலமர்வில் தேசிய நீரியல் வள ஆராட்சி நிறுவனத்தின் அதிகாரிகள்,மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர்,கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாவட்ட, பகுதி, மீன் வாடி உரிமையாளர்கள்,மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் மீன் ஏற்றுமதியாளர்கள், ஐஸ் உற்பத்தியாளர்கள், மீன், விற்பனையாளர்கள், உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.