போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூபியை அமைப்பதற்குரிய முழு ஆதரவையும் அரசு வழங்கும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்றில் அறிவித்தார்.
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக நினைவுத்தூபியொன்றை அமைக்கவேண்டுமெனக் கோரி ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தவால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போரின்போது தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் தமது உறவுகளை இழந்தனர். எனவே, அவர்களை கட்டாயம் நினைவுகூர வேண்டும். இது அடிப்படை மனித விழுமியமும்கூட.
ஆகவே, நினைவுத்தூபியை அனைவருக்கும் பொதுவானதொரு இடத்தில் அமைக்கவேண்டும். இதற்கான பொருத்தமான இடமாக அநுராதபுரமே காணப்படுகின்றது. இடம் பற்றி கலந்துரையாடியே முடிவெடுக்கவேண்டும்.
அதேவேளை, நினைவேந்தல் நிகழ்வுக்குரிய திகதி, அதனை எவ்வாறு செய்வது, எந்த அமைச்சின்கீழ் அது இடம்பெறவேண்டும் என்பது உட்பட மேலும் சில விடயங்கள் சம்பந்தமாக பேச்சு நடத்தி முடிவுக்கு வரவேண்டும்” – என்றார்.