தேசிய அரசில் இருந்துகொண்டு மஹிந்த தலைமையிலான பொது எதிரணியுடன் உறவாடும் உறுப்பினர்கள் விவரமடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினரால் கையளிக்கப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகிவருபவர்களின் பெயர் விவரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகின்றது. அதன்பின்னரே தாவல்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே புலனாய்வு அறிக்கையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொது எதிரணியிலிருந்து ஏழு உறுப்பினர்கள் அரசுடன் இணைவார்கள் எனக் கூறப்படும் நிலையில் ஐவர் வருவது உறுதியாகியுள்ளது என்றும், அதற்குரிய சங்கமம் அடுத்தமாதமளவில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.