உத்தேச அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி கோரிக்கை என்பன நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் குரல்கொடுத்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவது மிக முக்கியமான விடயமென தெரிவித்த சுரேஸ், பதவி நியமனங்களின் போது பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வது சிறந்ததல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலேயே வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் சுரேஸ் குறிப்பிட்டார்.