“சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் சொகுசு வீடு தொடர்பில் விசாரணைகளில் சிக்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் இரண்டு வாரங்களில் தனது தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பார்” என்று விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரச விவசாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது. இக்குழுவின் விசாரணைகளில் தற்போது வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியே பிணைமுறி மோசடி தொடர்பில் முதலாவது முறைப்பாடு அளித்திருந்தது.
மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சு.க. எப்போதும் செயற்படும். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசீலித்து வருகின்றார். இன்னும் இரண்டு வாரங்களில் தனது இறுதி முடிவை அவர் அறிவிப்பார்” – என்றார்.