Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பரபரப்பான சுழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை

பரபரப்பான சுழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இது முக்கியத்துவமிக்க சந்திப்பாகக் கருதப்படுகின்றது.
வழமையாக நாடாளுமன்றம் ஆரம்பமாவதற்கு முதல் நாளே கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். நேற்று பௌர்ணமி தினம் என்பதால் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதுவே இன்று காலையில் நடைபெறவுள்ளது.
மஹிந்த அணியான பொது எதிரணியின் 32 எம்.பிக்களின் கையொப்பத்துடன் முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த வியாழனன்று நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இதை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உட்படுத்தல் – எப்போது விவாதத்துக்கு எடுப்பது என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் பேசப்படவுள்ளன.
அதேவேளை, ஆளுங்கட்சி, பொது எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டங்களிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக கருத்தாடல்கள் இடம்பெறவுள்ளன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன்போது பொது எதிரணி உறுப்பினர்கள் இது பற்றி கேள்வி எழுப்புவதற்குரிய வாய்ப்பு பிரகாசமாகவே தென்படுகின்றது.
இதற்கிடையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர்- ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடையும்வரை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியைத் தற்காலிகமாக இராஜிநாமா செய்யவுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தேசிய இறைவரிச் சட்டமூலம் தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளது. அத்துடன், உத்தேச 20 ஆவது சட்டமூலம் பற்றியும்  இன்று எதிரணிகள் கேள்விகளை எழுப்பவுள்ளன.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …