புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழு தனது இடைக்கால அறிக்கையை 35 பக்கத்திலிருந்து 25 பக்கமாகக் குறைத்து இறுதி செய்துள்ளது. 25 பக்கமாகக் குறைக்கப்பட்ட இடைக்கால அறிக்கையே அரசியல் நிர்ணய சபையில் (நாடாளுமன்றத்தில்) சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் வழிநடத்தல் குழுவின் கூட்டம் 3 தினங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் அதனைக் குறைக்கவேண்டும் என்ற யோசனை இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதற்கு அமைவாக, உபகுழுக்கள் ஆராய்ந்த விடயங்கள் தொடர்பில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் அதிக விடயங்கள் தேவை இல்லை என்பதன் அடிப்படையில், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை சுருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
35 பக்கமாக இருந்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை 25 பக்கமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அரச தலைவர் முறைமை தொடர்பில் வழங்கும் அறிக்கை, இடைக்கால அறிக்கையுடன் பின்னிணைப்பாகச் சேர்க்கப்படும்.
வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் ஓகஸ்ட் மாதம் 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.