உலகின் தலைசிறந்த நிதி அமைச்சர் என்ற விருதைப்பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பிணைமுறி மோசடி நடவடிக்கைகளால் நாட்டுக்குப் பெரும் அவமானத்தையும், தலைக்குனிவையும் ஏற்படுத்தியிருக்கிறார் எனவும், அதனால் அவர் தனது பதவியை உடனடியாகத் துறக்கவேண்டும் எனவும் ஜனசெத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-
“ரவி கருணாநாயக்கவின் லீலைகள் இந்த அரசு நியமித்த ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அம்பலமாகியுள்ளன. இத்தகைய மோசடியாளர் ஒருவர் தற்போதைய வெளிவிவகார அமைச்சராக இருப்பது வெட்கக்கேடு. அவரது தில்லுமுல்லுகள் இப்போது சர்வதேசத்துக்கும் தெரியவந்திருப்பதால் இலங்கையின் மீதான சர்வதேசத்தின் பார்வையில் பங்கம் ஏற்பட்டுள்ளது.
சிறந்த நிதி அமைச்சர் என்ற சர்வதேச விருதைப்பெற்ற ஒருவர் விருது கிடைத்த ஒரு வாரத்தில் தனது பதவியை இழந்த உலகின் முதல் சம்பவம் இதுவாகத்தான் இருக்கும்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் மோசடிக்காரர்கள், கொள்ளையர்கள் என்று சகட்டுமேனிக்கு குற்றஞ்சாட்டிவரும் இந்த அரசின் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் பாரிய தில்லுமுல்லுகள் அந்த அரசு நியமித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் அம்பலமாகியுள்ள பின்பும் அவரைப் பதவி விலக்காமல் அரவணைத்துக்கொண்டிருப்பது அரசின் கோழைத்தனத்தையும், கையாலாத்தனத்தையும் தெளிவாகக் காட்டிக்கொடுத்திருக்கிறது” – என்று தெரிவித்துள்ளார்.