சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை நிலை நிறுத்தும் சீனா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் செயற்கை தீவுகளை அமைத்து ராணுவத்தளங்களை உருவாக்கி வரும் சீனா தற்போது ராக்கெட் லாஞ்சர்களை அப்பகுதியில் நிலை நிறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

இந்தக் கடல் பரப்பில் அவ்வப்போது ராணுவப் பயிற்சிகளை சீன அரசானது மேற்கொள்ளும். இதனால், சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு சீன அரசு ஆளாகும். மேலும், சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளிவிட்டு சீன அரசானது, கடல் பகுதிகளில் செயற்கைத் தீவுகளை அமைத்து, அத்தீவின் மீது ராணுவத் தளங்களை உருவாக்கி வருகின்றது.

தற்போது இந்த ராணுவத் தளங்களில் ராக்கெட் லாஞ்சர்களை நிலை நிறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் சீனக்கடல் பிராந்தியத்தை பாதுகாக்கும் பொருட்டே இந்த ராக்கெட் லாஞ்சர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் அத்துமீறி தனித்து செயல்படுவதாக சீனா மீது மற்ற நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் இந்த நிலையில், சீனாவின் ராக்கெட் லாஞ்சர் விவகாரம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *