யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இடம்பெற்றது.
நல்லூரில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரைக் சுட்டுக்கொன்ற வழக்கின் சந்தேகநபரின் குடும்பமே இந்தச் செயலை செய்தது என தையலகத்தின் உரிமையாளர் குற்றஞ்சாட்டினார். தொடர்பில் உரிமையாளர் தெரிவித்ததாவது:
2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இருந்து நல்லூர் கோவில் வீதியில் தையல் நிலையம் வைத்துள்ளேன். என்னை அந்த இடத்திலிருந்து அகற்ற அயலவர்கள் பல தடவைகள் முயற்சி களை முன்னெடுத்தனர்.
மின்சார சபைக்கு முறைப்பாடு செய்து எனது கடைக்கான மின் இணைப்பையே துண்டித்தனர். பின்னர் உரிய காரணங்களைக் கூறி மீளவும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் எனது கடையின் பூட்டை உடைத்த அயலவர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு உள்ளது. இந்த நிலையிலேயே அவர்கள் இந்த இழி செயலை நேற்றிரவு (நேற்றுமுன்தினம்) செய்துள்ளனர் -–என்றார்.





