எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்
சென்னை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால், சென்னை கடற்கரை பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி ஆகியோர் பேசினர். அப்போது எண்ணெய் படலங்கள் மிதப்பதால், மீன் பிடிக்க முடியாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.
அதற்கு பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மும்பை சரக்கு கப்பலும், ஈரானை சேர்ந்த எண்ணெய் கப்பலும் மோதியதில் ஒரு டன் எண்ணெய் கசிவுகள் கடலில் கலந்துள்ளதாக கூறினார், இதனால் கடல்வாழ் உயிரினிங்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலை சீராக பத்து நாட்களாகும் என்பதால், மீனவர்களுக்கு உரிய உதவிகள் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.




