மத்திய அரசின் கரங்களில் அதிகாரம் காணப்படும் அரசியல் தீர்வே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மத்திய அரசின் ஆட்சிப் பீடத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய மகாநாயக்க தேரர்கள் இருவரும், ஜனாதிபதிக்கு 21 விடயங்களைச் சுட்டிக்காட்டி நீண்ட கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையையும் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“கண்டி தலதா மாளிகைக்கு முன்னாள் உள்ள வீதியை மீண்டும் திறக்கக்கூடாது. இலங்கையில் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும். புதிய அரசமைப்பை உருவாக்குவது அல்லது அரசமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். வனவிலங்கு பாதுகாப்புப் பகுதிகளை உறுதிப்படுத்த வேண்டும். நல்லிணக்க சபை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை உறுதிப்படுத்துவதன் மூலம் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு முயல வேண்டும். மத்திய அரசின் கரங்களில் அதிகாரங்கள் காணப்படும் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
முஸ்லிம் – தமிழ் மக்கள் இருக்கும் கிராமங்களின் நடுவில் வாழும் சிங்கள கிராமங்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முயல வேண்டும். இவ்வாறான பிரதேசங்களில் உள்ள அரச அதிகாரிகள் தமிழ் பேசுவோராக உள்ளனர். சிங்ள மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால் சிங்கள மக்கள் அங்கிருந்து தமது பாரம்பரியத்தைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகின்றது” – என்று அந்தக் கடிதத்தில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர்.





