காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறும் கோரி தமிழர் தாயகத்தில் 5 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
இந்தப் போராட்டங்கள் குறித்து அரசு தொடர்ந்தும் பராமுகமாகவே இருக்கின்றது எனப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 41ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாளாந்தம் பல்வேறு அமைப்பினரும் அரசியல் தரப்பினர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வவுனியா ஏ-9 வீதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக இன்று 37 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.
இதுதவிர முல்லைத்தீவில் 25ஆவது நாளாகவும், யாழ்ப்பாணத்தில் 18ஆவது நாளாகவும், திருகோணமலையில் 28ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.





