Saturday , June 28 2025
Home / முக்கிய செய்திகள் / புதிய அரசமைப்புக்கு முடிவுகட்ட நேரில் களமிறங்குகிறார் கோட்டா! – பரப்புரைப் போரை முன்னெடுக்க 6இல் ‘வெளிச்சம்’ எனும் அமைப்பு உதயம்

புதிய அரசமைப்புக்கு முடிவுகட்ட நேரில் களமிறங்குகிறார் கோட்டா! – பரப்புரைப் போரை முன்னெடுக்க 6இல் ‘வெளிச்சம்’ எனும் அமைப்பு உதயம்

புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீவிரம் காட்டிவரும் நிலையில், அந்த முயற்சியைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே நேரடியாகக் களமிறங்கி பிரசாரப் போரை வழிநடத்தவுள்ளார்.

இதற்காக ‘எலிய’ (வெளிச்சம்) எனும் சிவில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ள அவர், எதிர்வரும் 6ஆம் திகதிமுதல் அதன் செயற்பாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.

அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் பொரலஸ்கமுவையில் நடைபெறவுள்ளதுடன், அதற்குத் தலைமை தாங்குமாறு தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கோட்டாபய அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான தயான் ஜயதிலக்க, இராஜதந்திரியான தமரா குணநாயகம், முன்னாள் பிரதமர் நீதியரசர் சரத் என். சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் உட்பட பல்துறைகளிலும் உயர் பதவிகளை வகிப்பவர்கள் வெளிச்சம் அமைப்பின் அங்கத்தவர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மஹிந்த ஆட்சியின்போது மேற்கூறப்பட்டவர்கள் அரச தலைமைக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமாகத் திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதொரு அரசமைப்பை உருவாக்குவதற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், சு.கவின் உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அது மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது. எனவே, அதைத் தோற்கடிப்பதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும்.

அத்துடன், அரசின் பொருளாதார, வெளிவிவகாரக் கொள்கைத் திட்டங்களிலுள்ள குறைபாடுகள், நிதி முகாமைத்துவத்திலுள்ள சீர்கேடுகள், நிர்வாகக் கட்டமைப்பிலுள்ள குறைபாடுகள் உட்பட மேலும் பல விடயங்கள் சம்பந்தமாக மக்கள் மத்தியில் தீவிர பரப்புரையை முன்னெடுத்து மாற்றமொன்றை உருவாக்குவதே இதன் இலக்காக இருக்கின்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இந்த அமைப்பு பொது எதிரணியின் தேர்தல் பரப்புரைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதுடன், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பயணத்துக்கான பிள்ளையார் சுழியாகவும் அமையவுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv