ஜெனிவா பூகோள கால மீளாய்வு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பூகோள கால மீளாய்வு தொடர்பில் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் சமர்ப்பிக்கவுள்ளது.
இது தொடர்பாக மட்டக்களப்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் யேசுதாசன், மற்றும் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை 4 வருடங்களுக்கு ஒருமுறை உலகிலுள்ள நாடுகளின் மனித உரிமை மற்றும் மனித நேயம் தொடர்பாக பூகோள கால மீளாய்வை மேற்கொள்கிறது.
ஒவ்வொரு நாடுகளும் தமது நாடுகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதுடன் மனித உரிமைகளுக்காகச் செயற்படுகின்ற சிவில் அமைப்புக்களும் அதற்குச் சமாந்தரமாக அறிக்கைகளைச் சமர்ப்பித்து வருகின்றன.
2017ஆம் ஆண்டுக்கான சிவில் அமைப்புக்களினால் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அறிக்கையினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தேசிய கலந்துரையாடல் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக பிராந்திய ரீதியான கூட்டங்களை நடத்தி அறிக்கையை வலுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.










