கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நிறைவு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற விசேட திருப்பலிப் பூஜையின் பின்னர் திருச்சொரூபப் பவனியுடன் திருவிழா நிறைவுபெற்றது.

குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நெடுந்தீவு பங்குப்பணிமனை மேற்கொண்டிருந்ததுடன் தமிழகத்தைச் சேர்ந்த பங்குத்தந்தைகளும் இத்திருவிழாவில் பங்கெடுத்திருந்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (சனிக்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று மாலை 5 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆரம்பமாகிய திருவிழா இன்று விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு நிறைவு பெறவுள்ளது.

இத்திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இலங்கை – இந்திய பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்தவகையில் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கு அவர்களின் படகுகளை தரித்து வைப்பதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் பங்கேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக மக்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ளவர்களும் திருவிழாவில் கலந்து கொள்வது மரபாக கடைப்பிடிக்கப்படுவரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருப்பலி மற்றும் சொரூப திருப்பவனியுடன் விழா இனிதே இன்று நிறைவுபெறவுள்ளது.

கச்சதீவு திருவிழாவை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் படகுச் சேவையின்போது கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என்றும் இலங்கைக்கடற்படை தெரிவித்துள்ளது.