பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள வீடொன்றுக்குக் கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
விளக்கமறியல் காலம் முடிவடைந்த பின்னர் நேற்று மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான், சந்தேகநபர்கள் 19 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கைத் தவணையிட்டு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.





