பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி வழங்குவதற்கு புதிய நிபந்தனைகளை அமெரிக்க பாராளுமன்றம் விதித்துள்ளது. இதுதொடர்பாக சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தீவிரவாத தடுப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கூட்டணி நாடுகள் மேற்கொண்ட செலவுகளை அந்த நாடுகளுக்கு அமெரிக்கா திருப்பி அளித்து வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் தனியாக நிதியும் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியுதவியை குறைக்க டிரம்ப் தலைமையிலான புதிய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ அதிகாரச் சட்டத்தில் (தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம்-2018) மூன்று திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் இரண்டு திருத்தங்களை டானா ரோஹ்ரா பச்சரும், ஒரு திருத்தத்தை டெட் போயும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த சட்டத்திருத்தங்கள் அடங்கிய மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் பாகிஸ்தான் நிதியுதவி பெறுவவதற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ராணுவ உதவி வழங்கப்படுவதற்கு முன்பாக, பாதுகாப்புத்துறை மந்திரியின் ஒப்புதல் அவசியம் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரை 400 மில்லியன் டாலர்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு வாஜிரிஸ்தானில் ஹக்கானி தீவிரவாத குழுவிற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை எடுப்பதை, அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே, இந்த நிதியுதவியை பாகிஸ்தான் பெற முடியும் என்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்களை தடுப்பது மற்றும் வெடிகுண்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற நிபந்தனைகளும் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வந்த நிலையில், அது தொடர்பான நிபந்தனைகளை அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.