புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எடுத்துக்கூறும் போலி சுலோகங்களின் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் மல்வத்து பீட மஹாநாயக்கருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, பௌத்த பீடங்களுக்கு இடையில் பேதங்களும் ஏற்படுத்தப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அன்று அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அஞ்சி மௌனம் சாதித்ததாக பிரதமர் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற இளைஞர் பிக்குமார் ஒன்றியத்துடனான கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டார்.
இளம் பிக்குகளின் கல்வி உட்பட பல துறைகள் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. விஹாரைகளின் நிர்வாகத்தில் தலையிட வேண்டிய எந்தத் தேவையும் அரசாங்கத்திற்குக் கிடையாது. தற்சமயம் கலந்துரையாடப்படும் அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் புத்தசாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதலிடத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. சகல விஹாரைகளின் சுபீட்சத்திற்காகவும் அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது கவலைக்குரியதாகும். கடந்த காலத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் இருக்கவில்லை. பாதுகாக்கப்பட வேண்டிய இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படுகின்றன. 150 விஹாரைகளை பாதுகாக்கத் தேவையான நிதியுதவிகளும் வழங்கப்படவிருகின்றன என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.