புதிய அரசமைப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுவருவது அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதற்கு அல்ல எனவும், அதன் நிபந்தனைகளையும், சட்டதிட்டங்களையும் அமுல்படுத்துவதற்கே எனவும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு மக்களின் ஆணை கிடைத்திருக்கின்றது. அது நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிச்சயம் நிறைவேற்றப்படும். இதில் இரகசியம் எதுவும் கிடையாது. அது மக்களின் கருத்துக்கணிப்புக்கு விடப்பட்ட பின்னர் ஒன்றில் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.
புதிய அரசமைப்பைக் கொண்டுவர 62 இலட்சம் மக்களின் ஆணை கிடைத்திருக்கிறது. இதில் பிக்குமார்கள், சிவில் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினரும் உள்ளடங்குவர்” – என்று தெரிவித்துள்ளார்.