கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலராக கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதிலிருந்து அவரது செயலாளராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்தே, இந்தப் பதவியை ஒஸ்ரின் பெர்னாண்டோ ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி செயலர் பதவியை ஏற்றுக்கொள்ள தான் இணங்கியுள்ளதாக ஒஸ்ரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைவிட்டு தாம் விலகவிருப்பதாகவும் அவர் கூறினார்.
2001 2004 வரையான காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலராக பணியாற்றிய ஒஸ்ரின் பெர்னாண்டோ, 2015ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும், கிழக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலராக ஒஸ்ரின் பெர்னாண்டோ பதவியேற்கவுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து அவர் இன்று திங்கட்கிழமை விலகவுள்ளார்.
இதையடுத்தே, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இந்த நியமனம் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன, முன்னாள் அமைச்சர் அதாவுத செனிவிரத்ன ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.