ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவர் Joaquin Alexander Maza Martelli இடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் படையதிகாரி சரத் வீரசேகர இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இருவரது அறிக்கைகளும் உண்மைக்கு புறம்பானவை எனவும், இலங்கையின் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அவர்கள் இவ்வாறான தகவல்களை வெளியிடுவதாகவும் குறப்பிட்டுள்ளார்.
படை வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கே ஐ.நா. செல்கின்றேன் என முன்னதாக கூறிச்சென்ற சரத் வீரசேகர, அமெரிக்க மற்றும் பிரித்தானிய படை வீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை இலங்கை படையினருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தல்கள் காணப்பட்டதாகவும், நீதித்துறை கட்டமைக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் சுட்டிக்காட்டி, கடந்த வாரம் மொனிகா பின்டோவின் அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.