சீனாவில் மழலையர் பள்ளியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 59 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியில் பிரபலமான நர்சரி பள்ளியில் இருந்து இன்று மாலை குழந்தைகளை பெற்றோர் அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது பள்ளியின் பிரதான வாயில் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
இதனால், குழந்தைகளும் பெற்றோரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். பலரது உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. உடனடியாக மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உள்பட 59 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
சீனாவில் கடும் அதிருப்தியில் இருக்கும் நபர்கள், இதற்கு முன்பு பலமுறை நர்சரி பள்ளிக் குழந்தைகள் மீது கத்தி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், வெடிகுண்டு தாக்குதல் என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.