வடக்கு, கிழக்கில் எந்த வடிவத்திலும் அடிப்படைவாதம் மற்றும் இனவாதச் செயற்பாடுகள் உருவாகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே. இதில் வடக்கு, தெற்கு என்ற பிரிவுகள் இல்லை. அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படும் இனவாதச் செயற்பாடுகள் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
அத்துடன் நாடு இன்று 8,503 பில்லியன் கடன் தொகையில் இருக்கின்றது. இதிலிருந்து எமது நாட்டினை விரைவாக மீட்டெடுப்பதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பி கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமானால் தனியார் துறையினருக்கு முதலீடுகளை மேற்கொள்ள அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.