சமீப காலமாக அமெரிக்க மக்களிடம் ரஷியாவுக்கு எதிரான மனபோக்கை உருவாக்க சிலர் திட்டமிட்டு முயற்சித்து வருகிறார்கள் என அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தார். அவர் அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
அப்போது டொனால்டு டிரம்ப் பல்வேறு ரகசியங்களை ரஷிய மந்திரியிடம் கூறியதாகவும், குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ரகசியங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு ரஷியா உதவியதாகவும், தேர்தலில் சில தில்லு முல்லு வேலைகளை டிரம்புக்கு ஆதரவாக ரஷியா செய்ததாகவும் கூறப்பட்டது.
அது, பெரும் விவகாரத்தை ஏற்படுத்திய நிலையில் இப்போது டிரம்ப் அமெரிக்க ரகசியத்தை ரஷியாவிடம் கூறியதாக வந்த தகவல் மேலும் சர்ச்சையை அதிகப்படுத்தியது.
இது சம்பந்தமாக ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எங்கள் மந்திரியுடன் டொனால்டு டிரம்ப் சந்தித்த போது, எந்த ரகசியத்தையும் டிரம்ப் ரஷியாவுக்கு அளிக்கவில்லை. அங்கு என்ன நடந்தது? என்ன பேசினார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் தேவைப்பட்டால் நான் அமெரிக்க பாராளுமன்ற குழுவிடம் தருவதற்கு தயாராக இருக்கிறேன். சமீப காலமாக அமெரிக்க மக்களிடம் ரஷியாவுக்கு எதிரான மனபோக்கை உருவாக்க சிலர் திட்டமிட்டு முயற்சித்து வருகிறார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் இப்போது புதிய குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்கள்.
இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் முட்டாள்கள். நேர்மையற்ற மனிதர்கள்.
இவ்வாறு புதின் கூறினார்.