Tuesday , June 10 2025
Home / முக்கிய செய்திகள் / அமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்?

அமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்?

அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இழுபறி நிலவி வந்தது.

எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களின் போது, பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவதை சிறிலங்கா அதிபர் நிறுத்தி வைத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன், தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் பொறுப்புகளையும் மாற்றியமைப்பதற்கு மறுத்து வந்தது.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி பிரதமரின் ஆலோசனையின் பேரில் தான் சிறிலங்கா அதிபரால் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பதால், மைத்திரிபால சிறிசேனவினால் தன்னிச்சையாக அமைச்சரவை மாற்றத்தை செய்ய முடியாத நிலை உள்ளது.

அதேவேளை, அமைச்சரவையைக் கூட்டுவது மற்றும் அதற்குத் தலைமை தாங்கும் பொறுப்பு சிறிலங்கா அதிபருக்கே உள்ளதால், அந்த அதிகாரத்தை வைத்து அமைச்சரவைக் கூட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv