பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் வயது முதிர்வின் காரணமாக அரச பொறுப்புகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
பிரிட்டன் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத்தின் கணவரான 95 வயது இளவரசர் பிலிப், ஏடின்பெர்க் பிரபுவாக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக அவர் தன்னுடைய அரச பொறுப்பில் இருந்து இந்த கோடைக்காலத்துடன் விலக முடிவு செய்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகமுழுவதும் உள்ள 780 தொண்டு அமைப்புகளின் தலைவராகவும் உள்ள பிலிப், அவ்வமைப்பின் நிகழ்ச்சிகளில் இனியும் கலந்து கொள்ள இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ராணி இரண்டாம் எலிசபெத் அரச பொறுப்புகளை தொடர்ந்து கவனித்து வருவார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடின்பெர்க் பிரபு பொறுப்பிலிருந்து பிலிப் விலக முடிவெடுத்துள்ளதையடுத்து
அந்த பதவிக்கு அரச குடும்பத்திலிருந்து யார் வருவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 18 வயதில் ராணுவத்தில் இணைந்த இளவரசர் பிலிப் படிப்படியாக முன்னேறி அரச பொறுப்புகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.