அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் அவற்றைப் பொது இடங்களில் பேசும்போது பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சரத் பொன்சேகாவுக்கு கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. அவரை அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கும் செயலணிக்குப் பொறுப்பாக நியமிப்பது பற்றியே பேசப்பட்டது. அமைச்சரவையில் பேசப்படும் விடயங்களை பொது வெளியில் பேசும்போது அமைச்சர்கள் பொறுப்பாகச் செயற்பட வேண்டும்.
அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்போது மக்களுக்கான அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்புக்களையும் உள்ளடக்கிய செயலணியை நிறுவ வேண்டும். இது கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்படும் முடிவு அல்ல.
தேசிய அரசையும், மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்படுகின்ற முடிவாகும். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயலணி நிறுவப்படும் முடிவில் மாற்றமில்லை” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.