சுமணன் படுகொலை விவகாரம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி எம்.இளஞ்செழியன் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அத்தோடு, ஒவ்வொருவருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி இளங்செழியன், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடுமென எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞன், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் தப்பியோடி இரணைமடு குளத்தில் விழுந்து உயிரிழந்ததாகவே பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். எனினும், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்த சுன்னாகம் பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து, மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்குட்படுத்தியதாக சுமணனுடன் கைதுசெய்யப்பட்டிருந்த நண்பர்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *