ஸ்ரீலங்காவில் பல்வேறு பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த வைரஸ் தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய விடயங்களைக் கருத்திற்கொள்ளாமல் சுகாதார அமைச்சர் என்ற வகையில் ராஜித சேனாரத்ன, இந்த நிலைமை குறித்து கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. எனவே தட்டுப்பாடு நிலவுகிற வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் உடனடியாக அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.