முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் தொடர்பில் கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட அமெரிக்க சமஷ்டி நீதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வகிபாகம் தொடர்பில் விசாரிக்குமாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு கடந்த 4 ஆம் திகதி ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
லசந்த விக்கிரமதுங்க கொலை விவகாரம் குறித்து இலங்கை பல வருடகாலமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், குற்றவியல் வழக்கில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முக்கிய படுகொலையாளி பற்றிய சாட்சிகள் கிடைக்கப்பெற்ற போதிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்விசாரணையில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் பட்லெட் கூறியிருக்கின்றார்.
அத்தோடு அமெரிக்க நீதிமன்றத்தில் இடம்பெறும் இவ்வழக்கு விசாரணையானது லசந்த விக்கிரமதுங்க கொலை விவகாரம் குறித்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அதிகாரிகளுக்குத் தூண்டுதலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவர் செயற்பட்டதாக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விபரங்கள் கடந்த 7ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக நீதிக்கும், பொறுப்புக் கூறலுக்குமான மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.