எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல்
எச்1பி விசா வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி வேலை செய்வதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களுக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெருத்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஏராளமான இந்தியர்கள் இந்த விசாவில் அமெரிக்கா சென்று பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆட்சிக்காலத்தில், இந்த விசாவில் அமெரிக்கா சென்று பணியாற்றி வருகிறவர்களின் மனைவி அல்லது கணவர் (எச்4 விசாவில்) அங்கு வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
2015-ம் ஆண்டு இந்த அனுமதியை ஒபாமா நிர்வாகம் வழங்கியது.
ஆனால் இதற்கு எதிராக ‘சேவ் ஜாப்ஸ் யுஎஸ்ஏ’ என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி உயர்த்தியது. இது தொடர்பாக மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அங்கு ஒபாமா அரசின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து இப்போது ‘சேவ் ஜாப்ஸ் யுஎஸ்ஏ’ அமைப்பு, வாஷிங்டன் அப்பீல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் பதில் அளிப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் 60 நாள் அவகாசம் கேட்டு அந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் தாங்கள் தலையிடப்போவதாக ‘இம்மிக்ரேசன் வாய்ஸ்’ என்ற அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அமைப்பு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறியவர்களின் உரிமைகளுக்கானது. தனது உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்களைக்காக்க இதுதான் வழி என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.




