சீனாவின் 2017- ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – ராணுவ பட்ஜெட் 7 சதவீதம் அதிகரிப்பு
சீனாவின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ராணுவ பட்ஜெட்டுக்கென கடந்த நிதியாண்டைவிட கூடுதலாக 7 சதவீதம் தொகையை ஒதுக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் அரசு தீர்மானித்துள்ளது.
உலகில் அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தற்போது 23 லட்சம் படைவீரர்களை வைத்திருக்கும் சீனா, ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கென பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
அப்படி ராணுவ பலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும் சீனாவில் 3 லட்சம் ராணுவ வீரர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக அதிபர் க்சி ஜின்பிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.
சீர்குலைந்த பொருளாதார மந்தநிலையை புனரமைக்கவும், வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாலும், தரமான வீரர்களை கொண்டு வலிமையான ராணுவத்தை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக லெப்டினண்ட் ஜெனரல், கர்னல் என ராணுவத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை வரும் 2017-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாய முறையில் ராணுவத்தை விட்டு வெளியேற்றப்படும் அனைவருக்கும் நியாயமான ஓய்வுக்கால இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
சீன ராணுவத்தில் இப்படி ஆட்குறைப்பு செய்வது இது நான்காவது முறையாகும். இதற்குமுன், கடந்த 1987-ம் ஆண்டு 4.238 மில்லியனில் இருந்து 3.235 மில்லியனாக குறைக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு 5 லட்சம், 2003 முதல் 2005 வரை 2 லட்சம் வீரர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் 3 லட்சம் பேரை ராணுவ வேலையில் இருந்து வெளியேற்றுவதாக சீனா அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனாவின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அந்நாட்டு பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் ராணுவ பட்ஜெட்டுக்கென கடந்த நிதியாண்டைவிட கூடுதலாக 7 சதவீதம் தொகையை ஒதுக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் அரசு தீர்மானித்துள்ளது.




