கண்டியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்குரிய நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
வன்முறைச் சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, கண்டியிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 230 பேர் நேற்றுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 161 பேர் கண்டி மாவட்டத்திலும் ஏனைய 69 பேர் வெளியிடங்களிலும் கைசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சூத்திரதாரிகள் எனக் கருதப்படும் சிலர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகள் முடிவடைந்த பின்னர் அவை தொடர்பான அறிக்கைகள் இன்னும் சில நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கையளிக்கப்படவுள்ளன.
இந்நிலையிலேயே விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்குரிய பணிப்புரையைப் பிரதமர் விடுத்துள்ளார். அத்துடன், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் இது சம்பந்தமாக பிரதமர் இந்த வாரம் பேச்சு நடத்தவுள்ளார் எனவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது தீவிரமாக ஆராயப்படும் என்றும் பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.