கள்ள ரூபாய் நோட்டு கடத்தலை தடுக்க இந்தியா-வங்காளதேச எல்லையில் கம்பி வேலி.
இந்தியாவுக்கும், வங்காள தேசத்துக்கும் இடையே 4,096 கி.மீ. தூரம் எல்லைப்பகுதி உள்ளது. அதில் மேற்கு வங்காள மாநிலத்தில் 2,216.7 கி.மீட்டர் தூரமும், அசாமில் 263 கி.மீ. தூரமும், மேகாலயாவில் 443 கி.மீ.தூரமும், திரிபுராவில் 856 கி.மீட்டர் மற்றும் மிசோரமில் 318 கி.மீட்டர் தூரமும் இடம் பெற்றுள்ளது.
அதன் வழியாக வங்காள தேசத்தில் இருந்து இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளும், கால் நடைகளும் கடத்தி வரப்படுகின்றன. தீவிரவாத நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
அதை தடுக்க வங்காள தேச எல்லையில் கம்பி வேலியால் தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அப்பணிகளை வருகிற 2019-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வங்காள தேச எல்லையில் பாதி தூரத்துக்கு முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் நிலம் ஆக்கிரமிப்பு செய்வதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்களும், சிரமங்களும் இருப்பது ஒரு காரணமாகும்.
மேலும் மேற்கு வங்காள எல்லைப் பகுதியில் ஆறுகள், குறுக்கிடுகின்றன. அங்கு முள்வேலியால் தடுப்பு சுவர்கள் அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இருந்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் அப்பணிகளை முடிக்க தீவிர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.




