சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தளமான ராஸ்ரபதி பவனில் இடம்பெற்றது.
இதன்போது சூழலைப் பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கைகளை இந்திய ஜனாதிபதி பாராட்டினார்.
இதேவேளை, முழு உலகமும் மின்சக்தி பிரச்சனைக்கும், பூகோள வெப்பமாதல் அதிகரிப்பது தொடர்பான பிரச்சனைக்கும் முகங்கொடுத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இத்தகைய மாநாடு நடைபெறுவது சாலப் பொருத்தமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன், வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இந்திய ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.