கண்டியில் வன்முறைகள் வெடித்ததன் பின்னணியில் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் தெல்தெனியவுக்குச் சென்றதை அடுத்தே அங்கு அமைதியற்ற நிலை தோன்றியதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, திகண, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த பகுதிகளில் பௌத்த பிக்குகள் பலரையும் காண முடிந்தது.
முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலினால் காயமடைந்து மரணமான சிங்கள சாரதியின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சென்றிருந்தார்.
இதற்குப் பின்னரே திகணவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்தன.