திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு விபத்து : பலி 10 ஆக உயர்வு
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு நேற்று விபத்திற்குள்ளானது. 40 பேர் பயணம் செய்த இந்த படகில், 9 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. அப்பகுதி மீனவர்கள் படகுகளிலும், கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் விமானம் மூலம் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது படகில் பயணம் செய்தவர்களில் ஒரு சிறுமியின் உடலை அவர்கள் மீட்டனர். இதனால் படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சிறுமியை காணவில்லை என புகார் தெரிவித்ததால் தான் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வந்தது. சிறுமி உடல் கிடைத்த பிறகு, வேறு யாரும் புகார் தெரிவிக்காததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.




