வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியாதவர்கள் இந்தப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினது தலைவி யோகராசா கனகரஞ்சனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களை கடந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. நம்பிய எங்களது பிரதிநிதிகளாலும் எங்களுக்கு ஏமாற்றம். எங்களது பிரச்சி னைகளுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்து 315 ஆவது நாளாகவும் இரவு பகலாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீதியில் போராடி வருகின்றோம்.
நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம். இந்த புதிய வருடத்திலாவது எங்களது விடயத்தில் அரசியல் தரப்பினர்கள் அக்கறைச் செலுத்த வேண்டும். எங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு அரசதலைவர், மற்றும் முதலமைச்சர் ஆகியோர் உரிய பதிலை வழங்க வேண்டும். அதற்கு தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்– என்றார்.