நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துக் கூறினார்.
“அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸூடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று கூறப்படுகின்றது. நீங்கள் இந்தியா சென்ற வந்த பின்னரே தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று கூறினீர்கள் என்றும் இந்தக் கூட்டைத் தீர்மானித்தது இந்தியாதான் என்றும் தகவல்கள் வெளியாகின்றனவே?”- என அவரிடம் கேட்கப்பட்டது.
“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) இந்தியாவுக்கு போக மாட்டார்களா?, இந்தியா செல்பவர்கள் வித்தியாசமான ஆள்களா?, இந்தியாவுக்குச் சென்றால்தான் ஏதாவது வித்தியாசமா?, கொழும்பில் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகங்கள் இருக்கின்றனவே அங்கு சென்று அவர்கள் பேசுவதில்லையா?”- என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த சுரேஸ் பிரேமச்சந்திரன் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியான பதில் எதையும் கூறவில்லை.





