த. கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படவில்லை என்கிறார் வரதராஜப் பெருமாள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்பது தவறான கருத்து, தங்களது முயற்சியால் உருவானது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலதடவைகள் சொல்லியிருக்கின்றார். என்று வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

வரதராஜப் பெருமாள் தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அரசாங்கத் தமிழ் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் அவர்கள் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எவ் பிளவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்க முன்னரே 1999ஆம் ஆண்டு புலிகளாலேயே ஈபிஆர்எல்எவ் பிளவுபட்டதென்றார். சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலான ஒரு அமைப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைக் கொண்டுசெல்ல முற்பட்டார். அதற்கு வசதியாக அவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை உடைத்தார் என்று வரதராஜப் பெருமாள் குற்றஞ்சாட்டினார்.

இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த வரதராஜப்பெருமாள் அவர்கள்

கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டபோது . எங்களுக்கு ஆதரவாக ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் தமிழ்க்கூட்டமைப்புக்குள் இருந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. அதேபோல தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் அந்த விருப்பத்தை எங்களுக்குத் தெரிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார். ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்தான் இதற்கு தடையாக இருந்தார். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை சில நாட்களுக்கு முன்பு திருமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கலந்துகொண்ட பொதுமக்கள் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின்பேரில் வரதராஜப்பெருமாள் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *