உண்ணாவிரதக் கைதிகள் பலவந்தமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்ப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் பலவந்தமாகச் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு இடமாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 25ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளான ம.சுலக்ஷன், க.தர்ஷன், இ.திருவருள் மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவர்களது உடல் பலவீனமடைந்து அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். கடந்த 17ஆம் திகதி தமது உயிருக்கு ஆபத்து ஏதாவது நேர்ந்தால் தாமே பொறுப்பு என்று கடிதம் எழுதி சிறைச்சாலை வைத்தியசாலையில் கொடுத்துவிட்டு சிறைக்கூடத்துக்குத் திரும்பினர்.

அதன் பின்னரும் அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் தமிழ் அரசியல் கைதிகள் மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் நிர்ப்பந்தப்படுத்தி சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர் என்று சக அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *