ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார்
தமிழக முதல்வர் ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார். அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பார்.
சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை இன்று கவர்னர் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு விதமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அவர் இறந்த அதே மாதத்திலேயே சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த ஒரு மாதத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா அதிமுக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அந்த முடிவை முன்மொழித்த ஓ. பன்னீர்செல்வம், தன்னுடைய முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். இந்தக் கடிதம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கடிதத்தை கவர்னர் ஏற்றுக் கொண்டார். மேலும், அடுத்த முதல்வராக சசிகலா பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிக்கலாம் என்று கவர்னர் தெரிவித்துள்ளார். சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகல் கவர்னருக்கு அளிக்கப்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.




