வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தவேளை அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் குறித்து தங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது:-
“இலங்கையில் காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கள் தொடர்பில் நாங்கள் சந்தித்த கடந்த கால அனுபவங்கள் காரணமாக அவற்றின் தோல்வி மற்றும் நேர்மையற்ற தன்மை காரணமாக தற்போதைய காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தால் பலவந்தமாகக் காணாமல்போகச்செய்யப்படுதல் விவகாரத்துக்குத் தீர்வைக் காணமுடியுமா என்பது குறித்து சந்தேகம் கொண்டுள்ளோம்.
பாதிக்கப்பட்ட சமூகத்தவர்கள் மத்தியில் இவ்வாறான அமைப்பு குறித்து பலத்த சந்தேகம் காணப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி குறிப்பிட்ட அலுவலகத்தை ஏற்படுத்துவதற்கான ஆணையில் கைச்சாத்திட்டதற்காக அவருக்கு சர்வதேச சமூகமும் உள்ளூர் தரப்புகளும் பாராட்டுகளைத் தெரிவிப்பது குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்.
எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜூன் 12ஆம் திகதி எங்களைச் சந்தித்தவேளை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்” – என்றனர்.