தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுக்களிலும், அமைதி முயற்சிகளிலும் நடுநிலையாளராகப் பங்கேற்ற எரிக் சொல்ஹெய்ம், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்றும் எனக்குத் தெரியவில்லை. எனினும், பிரபாகரனின் 12 வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, பின்னர் அவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்றே நாங்கள் மிகமிக வலுவாக சந்தேகிக்கின்றோம். இது முற்றிலும் மிக மோசமான பொறுப்பற்ற தீய செயல். இந்த விடயத்தில் இலங்கைப் படையினர் மிகமிக நன்றாகச் செயற்படாதது துரதிஷ்டம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.