கொலைகள் ஊடாக ஆட்சியைத் தொடர அரசு திட்டம்! – இப்படிக் குற்றஞ்சாட்டுகின்றது மஹிந்த தரப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“கொலைகள் செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த அரசு வந்துள்ளது” என்று மஹிந்த அணி எம்.பி. ரோஹித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“இந்த அரசு இரண்டு வருடங்களை வீணாகக் கழித்துவிட்டது. மீதி வருடங்களையாவது நல்லமுறையில் கழிக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். அமைச்சரவை மாற்றம் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரும்.அந்த மாற்றத்தோடு நல்ல நிலைமை ஏற்படும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் சில பொறுப்புகள் மாற்றப்பட்டதோடு சரி. எதுவும் நடக்கவில்லை. அந்த அமைச்சரவை மாற்றத்தின் பின்தான் நாட்டின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். எவராலும் இதைச் சகிக்கமுடியாது.

பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. அரச சொத்துகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. நாடு ஓரிடத்தில் ஸ்தம்பித்து நிற்கின்றது. முன்னோக்கி நகரமுடியவில்லை. தேர்தல்களை நடத்துவதற்கும் அரசால் முடியவில்லை. தோல்விப் பயமே இதற்குக் காரணம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது. அடுத்து மாகாண சபைத் தேர்தல்களும் ஒரே தினத்தில் நடத்துவதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் இந்த வருடம் செப்டெம்பரில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அசாதாரண நிலைமையை இந்த அரசு இப்போது உருவாக்குகின்றது.கொலைகள் செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த அரசு வந்துள்ளது. இதன் விளைவுகளை நாம் விரைவில் அனுபவிக்க நேரிடும்” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *