ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை: தயாசிறி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றிய காலத்தில், அவரது உறவினர்களுக்கு பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் சொகுசு வீடொன்றை பெற்றுக்கொடுத்து, வாடகையும் செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டு, தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விசாரணை நிறைவடையும் வரையாவது ரவி கருணாநாயக்க பதவி விலகுவது சிறந்த முன்னுதாரணமாக அமையுமென தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இவ்விடயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதென குறிப்பிட்டுள்ள தயாசிறி, ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் விவகாரத்தில் தலையீடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகினார். எனினும் அதனைவிட பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமந்தப்பட்ட ரவி கருணாயக்க, ஏற்கனவே பதவி விலகியிருக்க வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆட்சியாளர்கள் மீதான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், நல்லாட்சியில் அவ்வாறான தவறுகள் இடம்பெறாத வண்ணம் மக்கள் பிரதிநிதிகள் அவதானமாக செயற்பட வேண்டுமென அமைச்சர் தயாசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *