ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொருளாதார தடைகள்: வடகொரியா கடும் கண்டனம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த பொருளாதார தடைக்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐ.நா சபையின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக கடந்த மாதத்தில் மட்டும் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இரண்டு முறை பரிசோதித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான பாதுகாப்புக் குழுவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அதில், வடகொரியாவில் இருந்து நிலக்கரி, இரும்பு, மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வகையான ஏற்றுமதிகளின் மூலம் வடகொரியா 300 கோடி அமெரிக்க டாலர்களை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இந்த தீர்மானம் ஐ.நா.வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா. சபையின் இந்த முடிவுக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வடகொரியா கூறுகையில், ‘எங்கள் அணு ஆயுத சோதனைகள் பற்றி யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எங்கள் முடிவிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். மேலும் அமெரிக்கா எங்களிடமிருந்து அதிக தொலைவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கிறது. ஆனால் அது மிகப் பெரிய தவறு. இந்த முடிவில் அமெரிக்காவிற்கும் அதற்கு உடந்தையாக உள்ள நாடுகளுக்கும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *