தமிழகத்தில் ரசாயன மாற்றம் ஏற்படாது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணைந்தாலும், இணையாவிட்டாலும் தமிழகத்தில் எந்தவித ரசாயன மாற்றமும் ஏற்படப் போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், ” 123 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த முதலமைச்சர், இந்த கட்சியையும், ஆட்சியையும் காட்டிக் கொடுத்த துரோகியுடன் இணைய வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என வினாவியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “பால் ஊட்டி வளர்த்த முளையை கிள்ளி பல்லாங்குழி ஆட துடிக்கின்றனர். விதை நெல்லை விற்பனை செய்ய தீர்மானித்துவிட்டார்கள். எரிகிற பிரச்னையிலிருந்து தமிழக மக்களை திசை திருப்ப இணைப்பு நாடகம் பயன்படலாம். இணைத்தாலும் ஒருநாள் செய்தி தான் அது. அதனால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.” என்றும் அவர் கூறினார்.

“சிறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜீவசமாதி அடையப்போகிறேன் என முருகன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். உலகம் இருக்கும் தமிழர்கள் எல்லோரும் உலை நெருப்பாக கொதிக்கின்றனர். பதில் இல்லை. தண்ணீர் தருவதாக இருந்தால் அணை கட்டிக் கொள்ளுங்கள் என்று தமிழக வழக்கறிஞர் சொன்னதன் மூலம் காவிரி டெல்டா உழவர்களை முதலமைச்சர் வஞ்சித்திருக்கிறார்.

கோபத்தில் இருக்கிற மக்களை திசைதிருப்ப இணைப்பு நாடகம் என்கிற கேலிக்கூத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் இணைந்தாலும், இணையாவிட்டாலும் தமிழகத்தில் எந்தவித ரசாயன மாற்றமும் ஏற்படப்போவதில்லை” என அவர் கூறினார்.

https://www.youtube.com/watch?v=6Vz9EfNHZ0c

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *