சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் சசிகலா !!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் கடந்த 3-ந் தேதி மனு கொடுக்கப்பட்டது.அந்த மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரிசெய்து மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சசிகலாவின் வக்கீல்கள் நேற்று முன்தினம் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி மீண்டும் புதிய பரோல் மனுவை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த மனு சரியாக இருப்பதால் அதை ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 18 நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு 5 நாட்கள் கர்நாடக சிறைத்துறை பரோல் வழங்கியது.

இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை தினகரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 233 நாட்களுக்கு பிறகு சசிகாலா பரோலில் வெளியே வந்துள்ளார். சசிகலா வருகையையொட்டி சிறை வளாகத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் இல்லத்தில் சசிகலா தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *